Pages

படிக்க...

pimp myspace with Gickr

அறிவிப்பு

இந்த வலைப்பக்கத்தை தமிழ்மணம் ‘ PAID AGGREGATION Category’ யில் வகைப்படுத்தி இருப்பதால், தமிழ்மணம் திரட்டியில் இணைக்கவில்லை. வாசகர்கள் google reader / e-mail subscriptions மூலமாக தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

Subscribe in a reader

Subscribe to தீக்கதிர் by Email

Sunday, April 10, 2011

பேருந்தில் பர்ஸ் அடித்தவன் என்ன செய்வான்?



நகரப் பேருந்தின் உள்ளே பயணிகள் கூட்ட நெருக்கடியில் திணறிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது திடீரென ஒரு பயணி அலறுகிறார்: அய்யய்யோ என் பர்ஸைக் காணோம்!


அவ்வளவு வியர்வை நெருக்கடியிலும் மற்ற பயணிகள் அவரிடம் பரிவோடு விசா ரிக்கிறார்கள். எவ்வளவு பணம் வைத்திருந்தீர்கள், என்று பரிதாபத்தோடு கேட்கிறார்கள். கவனமாக இருக்கக்கூடாதுங்களா, என்று கரிசனத்தோடு கூறுகிறார்கள்.


ஒருவன் குரலை உயர்த்தி, இவன் களுக்கு இதுவே வேலையாயிடுச்சு... கூட்டமா இருக்கிற பஸ்ல ஏற வேண்டியது. ஏமாந்தவன் பர்ஸை அடிச்சிட்டு ஓட வேண்டியது. இந்த பிக்பாக்கெட் ரவுடிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கமும் ஒண்ணும் செய்ய மாட்டேங்குது, என்கிறார். மவனே, அவன் மட் டும் கையில கிடைச்சான், அவன் கையை முறிக்காம விடமாட்டேன், என்றும் கூறுகிறான். பர்ஸைப் பறிகொடுத்த பயணிக்கு அவன் நிறையவே ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டு, இனிமேலாவது பார்த்து கவனமா இருங்க சார் என்று அறிவுரையும் கூறி விட்டு தன்னுடைய நிறுத்தம் வந்ததும் இறங்கிச் செல்கிறான்.


பறிகொடுத்தவர் உட்பட பேருந்தில் உள்ள யாருக்கும் தெரியப்போவதில்லை, பர்ஸை அடித்தவனே அவன்தான் என்று. இப்படிப் பட்டவர்கள் பஸ்சுக்குத் தனியாக வருவதில்லை. குறைந்தது மூன்று பேராக வருவார்கள். குடும்பமாகவே வருவோரும் உண்டு. வேட்டை வியூகம் போல அமைத்துக் கொண்டு, முதல் ஆசாமி தனது பலியாட்டிட மிருந்து பர்ஸ் அல்லது நகையைத் தன் கைக்கு இடம்பெயரச் செய்கிறான். அடுத்த நொடியிலேயே, அப்படி இடம்பெயர்ந்த பொருள் அவன் கையில் இருப்பதில்லை. வியூகத்தின் அடுத்தடுத்த வரிசையில் இருக்கும் கூட்டாளிகளின் கைகளுக்கு அது கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தப்பட்டுவிடும். அவர்கள் அடுத்தடுத்த நிறுத்தங்களில் இறங்கி விடுவார்கள். முதலில் பொருளைக் களவாடியவன் யாருக்கும் சந்தேகம் வராமல், பறி கொடுத்தவரிடமே பேச்சுக்கொடுத்தவாறு பேருந்திலேயே சிறிது தொலைவு வந்துவிட்டு இறங்கிப்போய்விடுவான்.


நகரப் பேருந்துப் பயணமே தங்களுக்கான போக்குவரத்தாக வாய்க்கப்பட்டவர்கள் யாரும் அநேகமாக இந்த பிக் பாக்கெட் அனு பவத்திலிருந்து விடுபட்டிருக்க முடியாது. அரசியல் பயணத்தில் இன்று தமிழக மக்கள் வேறொரு காட்சியைப் பார்க்கிறார்கள். வரலாறு படைக்கப் புறப்பட்ட இயக்கத்திலிருந்து ஆட்சிபீடம் ஏறியவர்கள், வரலாறு காணாத ஊழல்களில் பிக்பாக்கெட் செய்த பணம்தான், வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்காகக் கடத்தப்படுகிறது. அதை மறைக்க ஆணையத்தின் மீது பாய்வது, நல்ல நகைச்சுவையாகவே இருக்கிறது.

இரவில் மின் வெட்டு எப்போது வரும், அப்போது மின்சார வேகத்தில் பணம் பட்டுவாடா செய்வதற்கான ஹைடெக் தொழில்நுட்பத்தோடு வீடு வீடாகச் செல்கிறார்கள் என்று மனித உரிமை கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் மேல் விழுந்து கடித்துக்குதறாத அளவில் அதனைத் திட்டித் தீர்க்கிறார் திமுக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான கலைஞர். என்ன கோபம், எதற்காகக் கோபம் என்பதே யாருக்கும் புரியாத வகையில், தேர்தல் ஆணையம் அதிமுக-வுக்கு சாதகமாகச் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறார். ஆணையத்தின் எந்த நடவடிக்கை பற்றிப் பொருமுகிறார் என்பதை யாரும் அறிந்துகொள்ள முடியாத வகையில், ஆணையத்தின் செயல்பாடு தமிழகத்தில் அவசரநிலை ஆட்சி போல இருக்கிறது என்று சீறுகிறார்.


பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண் டுமோ என்று கேட்பதைப் பழைய கதையாக்கி விட்டு, கலைஞர் பேசுவதையே தானும் பேசுகிறவராக பாமக தலைவர் ராமதாசு, தன் பங்கிற்கும் தேர்தல் ஆணையம் மீது வசை மாரி பொழிகிறார்.


அரசு எந்திரத்தைத் தவறான முறையில் தேர்தல் நோக்கத்திற்குப் பயன்படுத்த இயலாமல் ஆணையம் தடுத்திருக்கிறதே அதைச் சாடுகிறார்களா? ஏகப்பட்ட வாகனங்களைத் தூசுபறக்கக் கொண்டுசென்று வாக்காளர்களை மருட்டவிடாமல் ஆணையம் முட்டுக் கட்டை போட்டிருக்கிறதே அதைத் தாக்குகிறார்களா? தங்களுக்கு ஒத்து வராத மாவட்ட ஆட்சியரை மாற்றுவதற்கு ஆணையம் மறுத்து விட்டதே அதைத்தான் குற்றம் என்கிறார் களா? பணபலத்தைக் காட்டி எங்கும் ஆளுங்கட்சியின் தோரணங்களும் கொடிகளும் விளம்பரங்களுமாய் ஆக்கிரமிப்பதை ஆணையம் தவிர்த்துவிட்டதே அதைத்தான் எதிர்க்கட்சிக்கு சாதகம் என்கிறார்களா? பேருந்தின் பிக்பாக்கெட் பேர்வழி, தன் திருட்டை மறைக்க தானும் சேர்ந்து பர்ஸ் திருடனைத் திட்டுவது போல இல்லையா இது? ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைகளில் சிக்குவதெல்லாம் ஆளுங்கட்சிக்காரர்கள்,

விஞ்ஞானமுறையில் கடத்துகிற பணம் என்று அம்பலமாகிவரும் நிலையில், இப்படி ஆணையத்தைத் திட்டுவதன் மூலம் மக்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்வது எப்படி இருக்கிறது தெரியுமா? வடிவேலு பாணியில் சொல்வதானால் சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு!


தேர்தல் நடத்தை விதிகளை கறாராகச் செயல்படுத்துவதில் மேற்கு வங்க இடது முன்னணி அரசு முழுமையாக ஒத்துழைக்கிறது என்று தலைமைத் தேர்தல் ஆணையரே பாராட்டியிருக்கிறார். தமிழக அரசுக்கும் அப்படிப்பட்ட பாராட்டைப் பெற்றுத் தருவதற்கு மாறாக, இப்படிப்பட்ட தாக்குதல்களில் திமுக தலைமை இறங்குவதைப் பார்க்கையில் வடிவேலு படத்தின் இன்னொரு வசனம்தான் நினைவுக்கு வருகிறது: இவரு அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு.

நன்றி: தீக்கதிர்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...