கைது நடவடிக்கையைக் கூட அரசியலாக்க தெரிந்தவர் கலைஞர் கருணாநிதி. தான் கைது செய்யப்பட்டதை வைத்தே விடிய, விடிய தொலைக்காட்சிகளில் ஓட்டி வாக்குகளைப் பெற்ற அவரின் வித்தை ஊரறிந்த உண்மையாகும்.
ஆட்சிக்கு வந்த போது காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டதாக காவல்துறையின் அமைச்சராக இருக்கும் கருணாநிதியே சொன்னதைக் கேட்டு தமிழகமே திகைத்துப் போனது. கெட்டுப்போன ஈரலுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவம் செய்திருப்பார் என்று நினைத்தால், செய்யவில்லை என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்குள் நடந்த மோதலை,” மானாட மயிலாட” பார்ப்பது போல காவல்துறை பார்த்துக் கொண்டிருந்ததை உலகமே பார்த்தது. வெற்றிவேல் என்ற காவல்துறை அதிகாரி பட்டப்பகலில் வெட்டப்பட்டு ரோட்டில் கிடந்த போது, அதை அமைச்சர்கள் வேடிக் கைப் பார்த்ததையும் நாடு பார்த்தது.
தற்போது முதல்வர் போட்டியிடும் அவரது சொந்த ஊரான திருவாரூர் வன்முறைகளின் தலைநகரமாகத் திகழ்கிறது. கள்ளச்சாராய வியாபாரிகளால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் நாவலன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். திருவாரூர் திமுக மாவட்டச்செயலாளர் பூண்டி கலைச்செல்வன் வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்டார். மதுரையில் முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் நடை பயிற்சி முடிந்து திரும்பிய போது வீட்டின் அருகிலேயே கொல்லப்பட்டார். கருத்துக் கணிப்பு வெளியிட்ட காரணத்தால் தினகரன் நாளிதழில் 2 பொறியாளர்கள் உள்ளிட்ட மூவர் எரித்துப்படுகொலை செய்யப்பட்டனர்.
சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்குகளை எப்படியாவது பெற்று வெற்றி பெற வேண்டும் என்பதற்காக “மறக்கமுடியுமா” என்ற பழைய தேய்ந்து போன ரீல்களை எடுத்து தனது தொலைக்காட்சியில் கலைஞர் சுழல விட்டுள்ளார். இதில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட காட்சியும் வருகிறது. இந்த ஆட்சியை மாற்றுவதற்கு ஆரிய யுத்தமே நடக்கிறது என எழுதியும், பேசியும் வரும் கருணாநிதி, தற்போது நடத்துவது திராவிட யுத்தமா? காஞ்சி சங்கராச்சாரியார் கைது நடவடிக்கையைப் பாராட்டிய மானமிகு அய்யா கி.வீரமணியை தற்போது பக்கத்தில் வைத்துக் கொண்டு இப்படிப்பட்ட காட்சியை ஒளிபரப்ப கலைஞர் எப்படி துணிந்தார்?
கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வரை கைது செய்யக்கூடாது என கலைஞர் சொல்ல வருகிறாரா? சங்கராச்சாரியார் மீது அப்படி என்ன கலைஞருக்கு திடீர் பாசம்? கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியாரை காவல்துறை அழைத்துப் போவதை திரும்ப திரும்பக் காட்டி, மறக்க முடியுமா எனக்காட்டத்துணிந்த கலைஞர் தொலைக்காட்சிக்கு, தினகரன் எரிப்பு வழக்கில் மு.க.அழகிரி கைது செய்யப்பட்டு காவல்துறையால் அழைத்து வரப்பட்டதை ஒருமுறையாவது காட்டியிருக்குமா? அதற்கான துணிவு இல்லையே!
-மௌரியன்
No comments:
Post a Comment