தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்திருப்பதைப் போன்றே பள்ளிகளிலும் ஆண்டுத் தேர்வுகள் முடிந்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சென்னை நகரில் பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் எந்த தரத்தில் உள்ளது என்பதை கண்டறிய தண்ணீர் தணிக்கை நடைபெறவுள்ளது.
மாணவர்கள் பருகும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது. கிணற்று நீர் என்றால் சுத்தமாக இருக் கிறதா? நிலத்தடி நீர் என்றால் உவர் நீராக இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படுவதோடு தண்ணீரின் தன்மையும் ஆய்வு செய்யப் படவுள்ளது. மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி வரும் மழை மையம் (ரெயின் சென்டர் ) இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
குடிநீரை பொறுத்தவரை பல பள்ளிகளில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது கிடையாது. சில பள்ளிகளில் தண்ணீர் வசதியே இல்லை. மாணவர்கள் வீடுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்துதான் பருகி வருகி றார்கள். பல பள்ளிகள் குடிநீர் தொட்டி தண் ணீரைத்தான் நம்பியுள்ளன. வசதி படைத்த பள்ளிகளில் கூட மாணவர்களுக்கு குடிநீர் வசதி என்பது மிக மோசமாக உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மழை நீர் சேகரிப்பு என்பது அரசு கட்டிடங்கள், மருத்துவ மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தபோதிலும் பள்ளிகளில் இல்லை. மழைக்காலங்களில் வீணாகும் நீரை பள்ளிகளில் தேக்கிவைத்தால் அதனை சுத்தப்படுத்தி குடிநீருக்கு பயன்படுத்தமுடியும் என்று மழை மையம் வலியுறுத்தி வருகிறது. மேலும் இந்த திட்டத்தை அமல்படுத்த துவங்கினால் மழைக் காலங்களில் தாழ்வான பள்ளிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியும் என்கிறார்கள் இந்த மையத்தினர்.
இந்த மழை நீர் நிர்வாக முறையின் முக்கியத்துவத்தை அறிந்திராமல் பல பள்ளிகள் இருப்பதுதான் கவலைதரக்கூடிய விஷயம். தரமான குடிநீரை மாணவர்கள் பருகுவதன் மூலம் தண்ணீரால் வரும் நோய்களையும் தவிர்க்கமுடியும். இந்த தண்ணீர் தணிக்கையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு பள்ளிக்கும் மழை மையத்தினர் சென்று மழை நீர் அறுவடைக்கான வாய்ப்புகளை சேகரிக்கவுள்ளனர்.
மேலும் இந்த பணியில் மாணவர்களையும் ஈடுபடுத்த உள்ளதால் அவர்கள் மழை நீர் சேகரிப்பு பணி குறித்த விழிப்புணர்வை பெறுவதோடு மக்களிடமும் இந்த திட்டத்தின் பயன்களை விளக்குவது, இப்போது இல்லாவிட்டா லும் எதிர்காலத்திலாவது நல்ல பலன்களை ஏற்படுத்தும். மேலும் பல்வேறு வகையான தண் ணீரை எந்தெந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள இந்த தண்ணீர் ஆய்வு பயன்படும்.
மாணவர்களின் நலனில் அக்கறை கொண் டுள்ள அரசுப் பள்ளிகள் உள்பட சில தனியார் பள்ளிகள் இந்த முயற்சியை வரவேற்றுள்ளன. பள்ளிகளில் தண்ணீர் ஆய்வோடு நிறுத்திக் கொள்ளாமல் மாணவர்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்தும் ஆய்வு செய்வது அவசியம். 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் பெயருக்கு கழிப்பறைகள் இருப்பது குறித்து பல செய்திகள் வந்து விட்டன. மேலும் தண்ணீர் வசதி இல்லாதவைகளாக அவை உள்ளன. எனவே இது போன்ற ஆய்வுகளின் முடிவில் அளிக்கப்படும் பரிந்துரைகளை பள்ளிக் கல்வித்துறையும் மாநகராட்சியும் அமல்படுத்த வேண்டும். மேலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நடத்தப்படும் இது போன்ற ஆய்வுகளின் முழு நோக்கம் நிறைவேறினால் மகிழ்ச்சிதான்.
No comments:
Post a Comment